Thursday, September 14, 2006

மருதக்காதல் மறந்ததேனோ


வெற்று பாத்திரம்
சுமக்கும் அடுப்பில்
சமைக்க எதுவுமின்றி
அழற்றும்* நெருப்பைபோல் ,என்
மாழைத்* தீ
பாழாய் புகையுதே

சமைத்து பறிமாற
அன்பே நீயின்றி, எதை
சுவைத்து பசியாறும்
என் இளமை நோன்பின்றி

இரவு குளிர்கையில்
இங்கே ஒருவன்
போர்வையின் வெப்பம்
போதாமல் போராடுகிறேன்
மணாளனின் துணையோடு
மஞ்சத்தில் தீக்குளிக்கிறாய் நீ

காணிக்கை பாதுகாப்பது உண்டியலாயினும்
கடைசியில் சேருவதோ பூசாரியிடம்
உன் காதலை சுமந்த
என் உள்ளம் உண்டியலானதே தோழி

கூண்டை விட்டு
கொஞ்ச நேரம் விடுதலை
கொத்தி சீட்டெடுதால்
பசியார நெல்மணி
கிடைக்கும் என்ற அனுதாபத்தில்
கிளி ஜோசியம் பார்ப்பவர்போல
நீயாய் தந்தது அனுதாபமா
நானாய் புரிந்தது காதலா

பசிக்கு கொரிக்க பலகாரம்
பாகனுக்கு கையில் வருமானம்
கிடைக்கும் என்ற பச்சாதாபத்தில்
கோயில் யாணையிடம் ஆசி பெறுவோர்போல்
நீயாய் தந்தது பச்சாதாபமா
நானாய் புரிந்தது காதலா

கூழான சோறு காக்கைக்கு
பாழான சோறு பசுவிற்கு
பரிதாபத்தில் உணவிடுவோர்போல்
நீயாய் தந்தது பரிதாபமா
நானாய் புரிந்தது காதலா

இவை போலதானா
இனியவளே என்னை காதல் செய்தாய்
குழலாக உன்
இதழ் சேர
ஏங்கி இருந்த
மூங்கில் குருத்தை
அடுப்பூததானா
அன்பே அன்பே நீ உடைத்தாய்

தூசி படர்ந்த வீணையின்
துரு பிடித்த தந்திகளை
துடைக்கையில் எழும் அபஸ்வரமாய்
தூண்டபட்டது என் காதல் என நினைத்தாயோ இல்லை

தணித்து இசைக்க முடியாத
தம்புரா என் காதல் என்றென்னி
தள்ளி வைத்து வேறு
திருமனம் செய்து தாம்பத்ய
தவில் வாசிக்க சென்றாயோ

நுழைகையில் கேட்காமல் வந்தாய் பின்
பிரிகையில் மட்டும் ஏனடி கேட்டாய்
அனுதாபம் கொண்டாயா அல்லது
ஆழம் பார்த்தாயா
=====================================================================
*அழற்றும் - எரியும்
*மாழை - இளமை

Wednesday, September 06, 2006

கும்பகோன தீக்கோள்

கலகலப்பான பிள்ளைகளை
கலயத்தில் அள்ளியது
கொடுமைக்கு புதிய உவமையானது
மறுநாள் பொழுது
மஞ்சத்தில் தொடந்கி
மயானத்தில் முடிந்திட
மழலை செல்வங்களே நீங்கள் செய்த
மண்ணிக்க முடியாத பாவம் என்ன

பிணம் தின்பாய்
பிண்டம் தின்பாய் ஈமத்தில்
பழம் தின்பாய்
பண்டம் தின்பாய் ஹோமத்தில்

எதை கொடுத்தாலும்
தின்று செரிக்கும் தீயே
பிள்ளை கணியமுதை
மென்று கொண்றபோது
உண்டது செரித்ததா உனக்கு

நீ பிணமாக்கியதோ சில பிஞ்சுகள்
நடை பிணமானதோ பல நெஞ்சுகள்

வேண்டாத இடங்களில் பெய்து
வெள்ளமாய் கரை புரளும் மழையே
கீற்று கொட்டகை நணையும்படி
சாரல் தந்திருந்தால் போதும்
தீயின் தனல் தனிந்திருக்கும்
தொன்னூறு பிள்ளையும் பிழைத்திருக்கும்
தீ கைவிட்டதுபோல்
நீயும் விட்டது ஏன்

தீங்கிழைத்தோரை விட்டுவிட்டு
தீங்கிழைக்கபட்டோரை தண்டிக்க
தீர்ப்பளித்த கடவுளே
ஏலமிடப்படும் தீர்ப்புகள்
எப்போது தொடங்கியது உன் வளாகத்தில்
பள்ளிகூட லாபத்தில் பங்கெடுத்தாயா
உண்டியல் காணிக்கைக்கு அடிமையானாயா

கோடிகள் பல வாங்கி ,திருப்பி
கொடுக்காது கம்பி நீட்டும்
அப்பாவிகளை மண்ணித்துவிட்டு
ஆயிரம் ரூபாய் கடனை
அடைக்ககூட வருமனமில்லாத
படுபாவிகளை தேடி பிடித்து வசூலிக்கும்
விதிமுறை மீறாத நேர்மை தவறாத
வங்கி மேளாளரின் நியாயத்தைபோல
சித்திரகுப்தனின் கணக்கில் இன்னும்
எத்தனை எத்தனை பிழைகள்

Tuesday, September 05, 2006

பிரிவின் வலி


காற்று வாங்கத்தான்
கடலோரம் நடந்தேன்
இளைப்பார எண்ணித்தான்
ஈர மண்ணை மிதித்தேன்
எடுத்த காலடி
எழும் முன்னே, அலையே
இட்ட அடியை ஏன்
இழுத்து போனாய்

பாதையில் கிடக்கும் ரோஜா
பாதததில் மிதிப்பட்டால்
பாழ்பட்டு கூழாகும் என்று
பக்குவமாய் எடுத்தேன்
ஏன் முள்ளே நீ
என் விரல் கிழித்தாய்

காயபட்ட என் நெஞ்சம், உன்
கண்பட்டே தேறிவரும்போது
கைபட்டால் ஆறிடாதோ என்றே
விடியலில் எழுப்பிட
உன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தேன், சூரிய
வெளிச்சத்தை மட்டுமே நீ
எனக்காக விட்டுப்போனாய்

மறைத்து வைத்த உன் நிணைவுகளை
மறக்கசெய்ய வேண்டும் என
மன்றாடினேன் இறைவனிடம்

பட்டியல் ஒன்று கொடுத்தால்
ப்ரிசீலித்து முடிவெடுப்பதாய் சொன்னார்

முடிந்தவரை எழுதி பார்த்தும்
முடியவில்லை இந்த பட்டியல்
எழுதியதை சரி பார்க்க
ஏட்டை புரட்டியபோது உரைத்தது
உன் நிணைவுகளயும் அகற்றிவிட்டால், நான்
உயிர் வாழ்வதெவ்வாறு

கோடைக்கால பகல்பொழுதில்
கொளுத்தும் சூரியானான உன் பிரிவு, அதை
மறக்க நிணைத்து நான்
மதி இழந்துதான்
தனல் கக்கும் எரிமலைக்குள்
தலை கொடுத்ததுபோல் ஒரு உணர்வு, அய்யகோ
பிரிந்த வலியைவிட உன்னை
மறக்கும் வலி கொடியதடி,ஆதலால்
சிதைந்துபோன பின்னும்
சரித்திரம் சுமக்கும் பாலமாய் , நான்
சுமக்கிறேன் உன நிணைவுகளை

ஆழிப் பேரலை


ஆழிப் பேரலை வரலாறு மாற்ற வல்லது;
அகழ்வாராய்ச்சி நிரூபித்தது!
ஆழிப் பேரலை புவிவடிவை மாற்ற வல்லது;
அறிவியலாராய்ச்சி நிரூபித்தது!

எதிர் பார்த்து வருவது இயற்கையில் மரணம்;
எதிர் பாராது வந்தது இயற்கையால் மரணம்!

கும்பகோணத் தீகோளிலும் குழந்தைகள்,
குஜராத் நிலக் கோளிலும் குழந்தைகள்,
கொந்தளித்த கடற்கோளிலும் குழந்தைகள்;
குழந்தைகள் மீதான உன் பிரியத்தை,
காண்பித்த முறை சரிதானா இறைவா?

கால் நனைத்து திரும்பி போகும் அலைகள்,
கால் பிடித்து இழுத்து போகும் என்று,
கபடமற்ற பிள்ளைகள் அய்யகோ அறியவில்லை!

பிள்ளைகள் மகிழ்ந்து குலாவும்போது
பொங்கி வந்த கடலே!
பிணத்தின் மீதிருந்த பணம்,நகை பிடுங்கபடும் போதும்,
பழுதடைந்த வீட்டிலிருந்த பொருட்கள் திருடப்படும் போதும்,
பொறுமை காத்தது முறையா?

நிரபராதியை கொல்வது சட்டப் பண்பில்லை;
நிராயுதபாணியை கொல்வது யுத்த பண்பில்லை;
நம்பியோரை கொல்வது நல்ல பண்பில்லை;
நீலக்கடலே நீ, நீளம் தாண்டியது
நயவஞ்சகமன்றி வேறில்லை!

என் வீட்டில் பிணம் விழுந்தால்
எதிர் வீட்டினர் ஆறுதல்;
எல்லோர் வீட்டிலும் எஞ்சியிருப்பது பிணமெனில்,
எவருக்கு எவர் ஆறுதல்?

அடையாளம் சொல்லக்கூட
ஆளில்லாத குடும்பத்தில்,
அளிக்கபடும் நிதியுதவி
அரசியலாக்கப் படுவது வேதனையா? வேடிக்கையா?

சமுதாய சீர்கேடும் கலாச்சார முறைகேடும்
சங்கமிக்கும் இடம் கடற்கரை என்பதால் -அலையே
கறை துடைக்க கரை வந்தாயோ?
களையான மனிதரை விழுங்குவதை விட்டு
கலையான பிள்ளைகளை தின்றுவிட்டு
கறையாகி போனாயே!

ஆயிரம் அணுகுண்டு வீச்சைவிட கொடியது
ஆழிப் பேரலையின் கோர தாண்டவமிது!
அழிவின்மூலம் வலிமை காட்டும் மனிதன்போல
ஆண்டவனும் மாறியது என்ன கொடுமையிது

உயரே பறக்கும் காற்றாடி

மரணமொரு விந்தை;
மரணத்தை எல்லோரும்
ஏதோவொரு கணத்தில் சந்தித்திருப்போம்!
இதுதான் மரணமென்று உணருமுன்னே
கடந்து சென்றிருக்கும் அல்லது காவு கொண்டிருக்கும்!

மரணத்தின் வாசல் சென்று மீண்டவர் சொல்வார்;
"உயிரென்பது உயரே பறக்கும் காற்றாடி;
நூலவிழும் நாளதனை கணித்திடவே முடியாது!
மரணத்தை கண்டோருண்டு; வென்றாரில்லை!"

உடலின் மீதிருக்கும் மண்ணும்
உடலி னுள்ளிருக்கு முயிரும்
உதிரும் நேரம்வந்த போதில்
ஒட்டி யிருக்கப்போவ தில்லை!

ஒவ்வொரு கடையாயோடி அலையும் நாய்
ஒன்றுமே வாங்காதது போல்
ஒவ்வொரு கல்லறையாய் கவ்வியிழுத்தும்
ஒன்றுமே தேறாதது போல்
எங்கெங்கோ சுற்றிவந்து
எதையெதையோ சேர்த்துவைத்து
என்ன கொண்டு போகிறோம்
எழுந்து போகையில்;
எண்சாண் உடம்பில்
எச்சிலும் எலும்பும்
ஏழாயிரம் நோயுந் தவிர!

காத்திடவும் வகையறியாமல்
கைவிடவும் முடியாமல்
கவர்பிளந்த மரத்துளையில் இடையினிலே
காலிடுக்கிஅகப்பட்ட பின்னே
காலகற்ற வழியற்ற
ஆப்பதனை அசைத்திடும்
ஆவேசக் குரங்கனைய
அல்லலது கொண்டிடுவோம் கால மெல்லாம்!

செத்தபின்னே மெய்கூட
சொந்தமென எடுத்துச்செல்லவழி யில்லா
இறந்த காலத்தைப் பேசிப்பேசி
இன்றைய பொழுதைக் கழித்துவிட்டு
நாளைய இருளுக்கு பயந்து
நடக்கும் வாழ்வில் ஒளியேற்ற மறந்து
வேப்பெண்ணையிலூறிய
வெள்ளைச் சர்க்கரைபோல்
சுவையினை உமிழ்ந்துவிட்டு
சக்கையாய் சாகின்றோம்

இந்த நேரத்தில்
இந்த மரத்திலிருந்து
எத்தனை இலைகள்
எப்படி உதிருமென
எல்லாம் வல்ல இறைவன் கட்டளை; இதில்
அடுத்தவர் பார்வைக்காய்
அரிதாரம் பூசி பூசி
அசல்முகம் தொலைக் கின்றோம்;
ஆகையினால்
அவரவர் தேவைக்கு மீறியே சேர்க்காது
அடுத்தவரின் கையிருப்பை
அனுமதியின்றி புணராது
இயல்பாய் இருப்பதே இனிமை!